சென்னை: சென்னை புதுப்பேட்டையில் யார் பெரிய ஆள் என்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ரவுடி ஒருவரை 4 பேர் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஆயிரம்விளக்கு, சுதந்திர நகர், ஹவுசிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் (எ) மொக்க மோகன் (23). ரவுடியான இவர் மீது ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனியார் நிறுவனம் ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், புதுப்பேட்டையை சேர்ந்த ரவுடி புறா என்பவருக்கும் இடையே ஏரியாவில் யார் பெரிய ரவுடி என்ற போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் புதுப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்த புறா மற்றும் அவரது ஆதரவாளர்கள், மோகன் மற்றும் அவரது நண்பர்களான அருணாச்சலம் குறித்து விசாரித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மோகனுக்கு தெரியவந்தது.இதனால் ஆத்திரமடைந்த மோகன் தனது நண்பர்களான சந்தோஷ், அருணாச்சலம், சுனில் குமார், மனோஜ்குமார் ஆகியோருடன் புதுப்பேட்டைக்கு சென்று, எங்களை யார் விரித்து சென்றது என்று கேட்டுள்ளார். பின்னர், நள்ளிரவில் புதுப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் அருகே உள்ள சாலைக்கு பைக்கில் சென்று, அங்கு நின்று இருந்த வாலிபர்களிடம், எங்களை யார் விசாரித்துவிட்டு சென்றது என்று கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அங்கிருந்த 4 பேர் திடீரென மோகனை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே மோகன் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் 4 பேரும், மோகனை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று, புதுப்பேட்டை அய்யாசாமி தெருவில் சுற்றி வளைத்து வெட்டி படுகொலை செய்தனர். பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரவுடி மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகொலை நடந்த இடத்திற்கு திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அதைதொடர்ந்து, கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில் புதுப்பேட்டை அய்யாசாமி தெருவை சேர்ந்த ரவுடிகளான விக்ரம் (20), யூடியூப் (எ) வெங்கடேசன் (20), விக்னேஷ் (21), வசீகரன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், புதுப்பேட்டை பகுதியில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட போட்டியில் மோகனை கொன்றது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தலைமறைவான அவர்கள் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….