சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்றுடன் (மார்ச் 31ம் தேதி) முடிந்தது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர், கரப்பிணிகள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் கவனமுடன் இருக்க வேண்டும். மத ஊர்வலங்கள் குறிப்பிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட கூடாது. நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தலாம். நிறுவனங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் மீது எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….