திருச்சி, ஜூலை 13: திருச்சி எ.புதூர் சோதனைச்சாவடி அருகே தீயணைப்பு வாகனம் சாலை நடுவே கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் நேற்று பாம்பு ஒன்று நுழைந்தது. இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே சிறிய ரக தீயணைப்பு மீட்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டில் புகுந்த 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பை பிடித்து எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விடுவதற்காக தீயணைப்பு வாகனத்தில் சென்றனர். அப்போது எடமலைப்பட்டிபுதூர் சோதனை சாவடி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வாகனம் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் இருந்த நிலையில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.