மஞ்சூர்,செப்.26: மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மஞ்சூரில் இசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. ‘பாடும் நிலா பாலு’ என ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மஞ்சூர் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சங்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட துணை தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகி சுந்தர்ராஜன், கடைக்காரர்கள் சங்க பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து எடக்காடு இசைக்குழு பாடகர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மூலம் பாலசுப்ரமணியத்திற்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாடகர் ஆரோக்கியநாதன், யோகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.