Friday, May 10, 2024
Home » எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

by kannappan

மொடக்குறிச்சி: எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை தேங்காய் ஏலமும், திங்கட்கிழமை தேங்காய் பருப்பு ஏலமும் நடந்து வருகிறது. மேலும் நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இதில், வியாபாரிகள் கலந்து கொண்டு விளைபொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 70க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கூலி நிர்ணயம் செய்து, வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும், அதற்கு பதிலாக மூட்டை கொண்டு வரும் சனிக்கிழமையோ அல்லது வாரத்தில் எந்த கிழமைகளிலும் வேலை செய்கிறோம் என கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்தின்போது, தங்களது கோரிக்கை குறித்து ஈரோடு விற்பனைக் குழு செயலாளர் சாவித்திரியிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி மற்றும் வியாபாரிகள், விவசாயிகள் மீண்டும் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏலம் நடைபெற்றது. அப்போது, மூட்டையை தைக்க ஆட்கள் வரவில்லை. பின்னர் இரவு மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புடன் விவசாயிகளே தங்களது மூட்டைகளை தைத்து எடை போட்டனர். இச்சம்பவத்தால் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மதியம் முதல் பரபரப்பாக காணப்பட்டது….

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi