Sunday, June 16, 2024
Home » எல்லை விரிவாக்கம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக சென்னை காவல்துறையை 3 ஆக பிரிக்க திட்டம்: தாம்பரம், அம்பத்தூரில் புதிய கமிஷனர் அலுவலகம் அமைகிறது

எல்லை விரிவாக்கம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக சென்னை காவல்துறையை 3 ஆக பிரிக்க திட்டம்: தாம்பரம், அம்பத்தூரில் புதிய கமிஷனர் அலுவலகம் அமைகிறது

by kannappan

சென்னை: சென்னை மாநகர காவல்துறை 3 ஆக பிரிக்கப்பட்டு தாம்பரம், அம்பத்தூர் ஆகிய இரு புதிய கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சென்னை மாநகர் காவல்துறை என்பது ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. சென்னை மாநகர காவல் துறையின் கமிஷனராக சங்கர் ஜிவால் உள்ளார். தற்போது பெரிய அளவில் சென்னை மாநகர் உள்ளதால், அதை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டது. சென்னை புறநகர் என்ற பெயரில் ஐஜி அந்தஸ்தில் ஒரு புதிய கமிஷனரகம் உருவாக்கப்பட்டது. அவருக்கு கீழ் 2 துணை ஆணையர்கள் செயல்பட்டு வந்தனர். பின்னர் 2011ம் ஆண்டு ஜெயலலிதா, சென்னை மற்றும் புறநகர் கமிஷனர் அலுவலகங்களை ஒன்றாக இணைத்தார். சென்னை கமிஷனராக ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ளவர் நியமிக்கப்படுவார். சில நேரங்களில் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகத்தில் மிகப்பெரிய ஆணையரகம் சென்னை காவல் ஆணையரகம் தான். சென்னையில் கமிஷனருக்கு கீழ், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மட்டும் ஐஜி அந்தஸ்தில் 2 கூடுதல் கமிஷனர்கள் (வடக்கு, தெற்கு) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ், டிஐஜி அந்தஸ்தில் 4 இணை கமிஷனர்கள், அவர்களுக்கு கீழ், 12 துணை கமிஷனர்கள், அவர்களுக்கு 48 உதவி கமிஷனர்கள் உள்ளனர். சென்னை மாநகர காவல்துறையை பொறுத்தவரை சென்னை வருவாய் மாவட்டத்தை தாண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் வரை பரந்து விரிந்துள்ளது. தற்போது சென்னைக்குள் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிர்வாக காரணங்கள், காவல் எல்லை விரிவாக்கம் காரணமாக சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதில் போலீசாருக்கு சிக்கல் உள்ளது. எனவே, சென்னை மாநகர காவல்துறையை இரண்டு அல்லது 3ஆக பிரித்து, மீண்டும் புறநகர் ஆணையரகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சென்னைக்கு புறநகரில் அமைந்துள்ள தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியும் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அறிவிப்புக்கு ஏற்ப காவல்துறையையும் பிரிக்கலாம் என்கிற கருத்து எழுந்துள்ளது. அதில் பழையபடி சென்னை காவல் ஆணையரகம் இயங்கும். அதற்கு ஏடிஜிபி அந்தஸ்தில் அதிகாரி இருப்பார். புறநகரில் தாம்பரத்திற்கு ஒரு ஏடிஜிபி அந்தஸ்திலும், ஆவடிக்கு ஐஜி அந்தஸ்திலும் கமிஷனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை காவல்துறை மூன்றாக பிரிக்கப்பட்டால், மொத்தமுள்ள 14 காவல் மாவட்டங்களில் 5, 5, 4 என்கிற விகிதத்தில் பிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1. சென்னை காவல் ஆணையரகம், 2. ஆவடி காவல் ஆணையரகம், 3. தாம்பரம் காவல் ஆணையரகம் என இருக்கும். அதன்படி சென்னை கமிஷனருக்கு கீழ் திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், புளியந்தோப்பு, பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களும், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் தாம்பரம், மவுண்ட், அடையாறு, பூந்தமல்லி, தி.நகர் ஆகிய காவல் மாவட்டங்களும், ஆவடி ஆணையரகத்தின் கீழ் அண்ணாநகர், அம்பத்தூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் மாவட்டங்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காவல் ஆணையரகம் பிரிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதிகரிக்கும் மக்கள் தொகை, நிர்வாக காரணங்கள், காவல் எல்லை விரிவாக்கம் காரணமாகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகவும் சென்னை காவல் துறை 3ஆக பிரிக்கப்படுகிறது….

You may also like

Leave a Comment

twelve + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi