சேத்தியாத்தோப்பு, ஆக. 15: சேத்தியாத்தோப்பு என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக, கடந்த 26ம் தேதி வளையமாதேவி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணிகளை என்எல்சி துவக்கியது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். என்எல்சி ஆர்ச் கேட் முன்பு பாமகவினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஒருநாள் பணி நிறுத்தத்துக்கு பின்னர் வாய்க்கால் வெட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. ஆரம்பத்தில் 35 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் 10க்கும் மேற்பட்ட ராட்சத கனரக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு என்எல்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த 11ம்தேதி வாய்க்கால் வெட்டும் பணிகள் நிறைவடைந்தன. மொத்தம் இரண்டரை கி.மீ தூரத்துக்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் கரைகள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் அங்கிருந்து திரும்பின. மேலும் போலீஸ் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது.