திருவொற்றியூர், செப்.20: வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து மணலி, கத்திவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 110 கி.வா திறன் கொண்ட மின்கம்பி, உயர் மின் கோபுரம் வழியாக செல்கிறது. நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தபோது, பலத்த காற்று வீசியதால் எண்ணூர் அண்ணா நகர், சாஸ்தி நகர் பகுதியில் இந்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் அந்த இடத்தில் தீப்பிடித்ததோடு, மின்சாரம் தடைப்பட்டது. கம்பி அறுந்து விழுந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தகவலறிந்த அத்திப்பட்டு மின் தொடர் கட்டுமான பிரிவு அதிகாரிகள் மற்றும் எண்ணூர் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்தினர். பின்னர், அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.