சேலம், செப்.29: சேலம் மாவட்டம் ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, சேலம் புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இறைச்சி, காய்கறி, பழக்கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர். இதில் முத்திரை இல்லாத, மறு முத்திரையிடப்படாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள், விட்ட தராசுகள் 200 மற்றும் அரசு முத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 500 இரும்பு எடை கற்கள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறியதாவது: அனைத்து கடைகள், நிறுவனங்களில் பொருட்கள் விற்பனை செய்யும் வணிகர்கள், இதுவரை முத்திரையிடப்படாமல் பயன்படுத்தும் எடையளவுகளை அந்தந்த பகுதிகளுக்கான முத்திரைஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும். பயன்படுத்த இயலாத எடையளவுகளை கழித்து விட்டு புதிய எடையளவுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிட வேண்டும்.
மறுமுத்திரை இடப்படாமல் இருந்தால் குறைந்தபட்சம் ₹5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ₹25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிட வேண்டும். கடைகளில் மறுமுத்திரைசான்றிதழை நன்றாக தெரியுமாறு வைக்க வேண்டும். அனைத்து வணிகர்களும் நுகர்வோர் நலன் கருதி முத்திரையிடப்பட்ட சோதனை எடைகற்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.