திண்டுக்கல்: திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்த திருமண மண்டபத்தில் பெரும்பாலான சேர்கள் காலியாகக் கிடந்ததால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.திண்டுக்கல்லில், நத்தம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். இதற்காக திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கும் அரங்கம், உணவுக் கூடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றில் பெரிய எல்இடி திரைகள் அமைத்து சேர்களை வரிசையாக போட்டிருந்தனர். இதில், எடப்பாடி பழனிசாமி பேசிய திருமண அரங்கத்திலும், வாகனம் நிறுத்தும் இடத்திலும் போடப்பட்ட சேர்களில் குறைவான அதிமுகவினரே அமர்ந்திருந்தனர். உணவுக் கூடத்தில் போடப்பட்ட சேர்களில் ஒரு ஆள் கூட இல்லாமல் காலியாகக் கிடந்தன. அங்கிருந்த எல்இடி திரையில் மட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயின. இதனால், திண்டுக்கல்லில் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மதுரை: முன்னதாக, மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக பொதுக்கூட்டம் மதுரை புதூரில் நேற்றுகாலை நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘‘‘உள்ளாட்சி அமைப்பு மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பு. குடிநீர், சாலை, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பொறுப்பு மாமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது. இதை நிறைவேற்ற வேண்டுமானால் வெற்றி பெறவேண்டும். அமைச்சரவையில் முக்கியமான துறை உள்ளாட்சிதான். நீட் தேர்வு வந்தது குறித்து பொது மேடையில் விவாதம் செய்ய நானும், ஓபிஎஸ்சும் தயார். வேஷ்டி நழுவும் போது அதை எப்படி சரி செய்வோமோ, அதுபோல மக்கள் சிரமப்படும் போது சரி செய்வோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்’’ என்றார்.முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….