ஊத்துக்கோட்டை, ஜன. 30: ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்த பழைய ஓடு போட்ட பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி சிட்ரபாக்கம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. இதில் அங்குள்ள 20 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இக்கிராமத்தில் உள்ள இந்த ஓடு போட்ட பள்ளி கட்டிடம் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
தற்போது இந்த ஓடு போட்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்து, சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் அச்சத்துடன் படித்து வருகிறார்கள். எனவே இந்த ஓடு போட்ட பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த 1962ம் ஆண்டு ஓடு போட்ட வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இதை அகற்ற வேண்டும் என கல்வி அதிகாரியிடம் நாங்கள் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட வேண்டும்.