நாகர்கோவில் : நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய விரிவாக்க பணிகளின் ஒரு கட்டமாக ஊட்டுவாழ்மடம் பழையாற்றின் மேல் ரயில்வே சார்பில் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையம், ஆண்டுக்கு சுமார் ரூ60 கோடி வருமானம் வரும் ரயில் நிலையம் ஆகும். தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள், வாராந்திர ரயில்கள், சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் தற்போது பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், ரயில்வே சார்பில் மாஸ்டர் பிளான் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த ரயில் நிலையத்தில் தற்போது உள்ள 4 பிளாட்பாரத்திற்கு பதிலாக கூடுதலாக 5 பிளாட்பாரமும், 3 பிட் லைனுக்கு பதிலாக கூடுதலாக 5 பிட் லைனும், 3 ஸ்டெபிளிங் லைனுக்கு பதிலாக கூடுதலாக 9 ஸ்டேபிளிங் லைனும், கூடுதலாக ஒரு சண்டிங் நெக் வசதியும் ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் தொடங்கின.நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்க திட்டம், நாகர்கோவில் – மணியாச்சி இரு வழிபாதை திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. முனைய விரிவாக்க திட்டத்தின் கீழ் புதிதாக 625 மீட்டர் அதாவது 26 பெட்டிகள் கொண்ட புதிய நடைமேடைகள் இரண்டு அமைக்கப்பட இருக்கின்றது. இந்த விரிவாக்க பணிகளின் ஒரு கட்டமாக, ஏற்கனவே இருந்த 3 பிட்லைனுக்கு அடுத்த படியாக 4 மற்றும் 5வது பிட்லைன்கள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில் 5 வது பிட்லைன் பணிகள் முழுமையாக முடிவடைந்து கடந்த மாதம் திறக்கப்பட்டது. 4 வது பிட்லைன் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 4 வது பிட்லைனும் விரைவில் திறக்கப்படும் என தெரிகிறது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தையொட்டி உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் விரிவாக்க பணிகளுக்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது ஊட்டுவாழ்மடம் பழையாற்றின் மேல் ஒரு ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தையொட்டி தற்போது கூடுதலாக 3 தண்டவாளங்கள் அமைக்கப்பதற்காக 3 பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 4 தண்டவாளங்கள் வருகின்றன. இதில் 2 தண்டவாளங்கள் ரன்னிங் நிலையிலும், 2 தண்டவாளங்கள் ரயில்கள் சண்டிங் செய்யும் நிலையிலும் இருக்கும். பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த வருடம் பெய்த மழை காரணமாக பழையாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த வருடமும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பழையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பால பணிக்கு சிக்கல் வருமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஊட்டுவாழ்மடத்தில் ரயில்வே பாலம் பணி நடந்து வருவதால், பழையாற்றில் தண்ணீர் செல்லும் திசை மாறி ஊட்டுவாழ்மடம் ஊருக்குள் வெள்ளம் வருகிறது. ஏற்கனவே கடந்த முறை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முறையும் அது போன்ற பாதிப்பு வருமா? என்று அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்….