ஊட்டி: ஊட்டியில் விளைவிக்கப்படும் பீட்ரூட்டிற்கு கிலோ ஒன்று ரூ.50 முதல் 60 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் அறுவடையில் மும்முரம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் வரவேற்பு அதிகமாக உள்ளது. இதனால், எப்போதும் நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மழை காய்கறிகளுக்கு மற்ற பகுதியில் விளையும் காய்கறிகளை காட்டிலும் விலை சற்று அதிகமாக கிடைப்பது வாடிக்கை. இம்முறை நீலகிரி மாவட்டத்தில் தேவையான அளவு மழை பெய்துள்ளதால் மலை காய்கறி விவசாயம் களைகட்டியுள்ளது.குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து காணப்படுகிறது. தற்போது ஊட்டியில் விளைவிக்கப்படும் பீட்ரூட்டிற்கு தரத்திற்கேற்ப கிலோ ஒன்று ரூ.50 முதல் 60 வரை கிடைக்கிறது. இதனால், பீட்ரூட் பயிரிட்டுள்ள வியாபாரிகள் அறுவடையில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஊட்டி அருகே உள்ள கப்பதொரை, முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா மற்றும் நஞ்சநாடு சுற்று வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட் அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்….