திருவாரூர், மார்ச் 2: உலக வர்த்தக மையத்திலிருந்து ஒன்றிய அரசு வெளியேற கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் திருவாரூரில் பொது மக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினர். உலக வர்த்தக மையத்தின் சர்வதேச மாநாடு அபுதாபியில் நடைபெற்ற நிலையில் இந்நிறுவனத்தின் நிபந்தனைகளான விவசாயிகளுக்கு ஆதரவு விலை வழங்காதே, அரிசி, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றிற்கான மானியம் வழங்க கூடாது, ரேஷன் கடைகளை மூட வேண்டும், விவசாயிகள் விளைவிக்கும் உற்பத்தி பொருட்களை அரசு கொள்முதல் செய்ய கூடாது,
தொழிலாளர் பெற்ற உரிமைகளை திரும்பப்பெற்று மானியம் மற்றும் சலுகை திட்டங்களை நிறுத்திட வேண்டும் என இந்தியாவை நிர்ப்பந்திக்கும் உலக வர்த்தக மையத்திலிருந்து ஒன்றிய அரசு வெளியேற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருவாரூரில் நேற்று பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொறுப்பாளர்கள் ஜோசப், முருகையன், சௌந்தர்ராஜன், தியாகராஜன், ஜெயபால், அறிவுடைநம்பி, பவுன்ராஜ், கருணாநிதி, சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.