க.பரமத்தி, ஜூலை 23: உலக மக்கள் நன்மைக்காக வேண்டி அஷ்ட நாகேஸ்வரியம்மன் கோயிலில் ஆடி பூர விழாவில் ஹோமங்கள் செய்து வழிபாடு நடைபெற்றது. க.பரமத்தி ஒன்றியம் க.பரமத்தி கடைவீதியை அடுத்து சந்தோஷ் நகரில் அஷ்டநாகேஸ்வரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. நேற்று 13ம் ஆண்டு விழாவும் ஆடி பூர உற்சவ விழாவையொட்டி உலக மக்கள் நன்மைக்காகவும் ஊர் மக்கள் நன்மைக்காக வேண்டி அஷ்ட நாகேஸ்வரியம்மன் கோயிலில் ஆடி பூர விழாவில் ஹோமங்கள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. விழாவையொட்டி காலை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கப்பட்டு கணபதி ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. ஹோமங்களை கரூர் சங்கரமடம் ப்ரம்ம ராகவேந்திரபட் தலைமையில் குழுவினர் செய்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள மூலவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகை மூலிகை பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அஷ்ட நாகேஸ்வரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.