Sunday, June 9, 2024
Home » உலக புலிகள் தினத்தையொட்டி காஞ்சியில் மினியேச்சர் ஓவியம்

உலக புலிகள் தினத்தையொட்டி காஞ்சியில் மினியேச்சர் ஓவியம்

by Karthik Yash

காஞ்சிபுரம், ஜூலை 30: காஞ்சிபுரத்தில், உலக புலிகள் தினத்தையொட்டி 2சென்டிமீட்டர் அளவுள்ள மினியேச்சர் ஓவியத்தினை ஓவியர் சங்கர் வரைந்துள்ளார். சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ம்தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். உலக வனவிலங்கு நிதியத்தின்படி, கடந்த நூற்றாண்டில் 97 சதவீத புலிகள் மறைந்து விட்டதாகவும், சுமார் 3,000 புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் 2010ம் ஆண்டு சர்வதேச புலிகள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

புலிகள் அழிவின் விளிம்பில் இருப்பதால், நிலைமை மோசமடைவதை தடுக்க ரஷ்யாவில் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் மாநாட்டில் பல நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சட்டவிரோத வனவிலங்கு வேட்டை, வனவிலங்கு வர்த்தகம், மனித-வனவிலங்கு மோதல், வாழ்விட இழப்பு ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்தால் இந்த உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இந்த நாள் புலிகளின் வாழ்விடங்களை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் முயல்கிறது. சர்வதேச புலிகள் தினம், இயற்கைக்கான உலகளாவிய நிதியம், விலங்குகள் நலனுக்கான சர்வதேச நிதியம் மற்றும் ஸ்மித்சோனியன் நிறுவனம் உட்பட பல சர்வதேச அமைப்புகளால் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடையே குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரத்தில் சேர்ந்த ஓவியர் சங்கர், 2சென்டிமீட்டர் அளவுள்ள மினியேச்சர் ஓவியத்தை பல வண்ணங்கள் கொண்டு உருவாக்கி அதனை காட்சிப்படுத்தி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ச உற்சவங்களை ஓவியங்களாக வரைந்து உருவாக்கியதும், காமராஜரின் பிறந்தநாளை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு வரைபடத்திற்குள் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi