கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார். உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தண்ணீர் சிக்கனத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் கல்லூரி மாணவிகள் மற்றும் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் கூறியதாவது:‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படி, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நீர் இன்றியமையாததாக விளக்குகிறது. அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து, மழைநீரை சேமிப்பதன் மூலம் தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம். கண்மாய், குளங்கள், ஊரணிகள், ஏரிகள் மற்றும் பழமை வாய்ந்த நீராதாரக் கட்டமைப்புகளை ஆழப்படுத்தி, மழை நீரினை சேமிக்கலாம். மேலும், வீட்டின் கூரையின் மேல் விழும் மழைநீரை தொட்டி மூலமும், திறந்தவெளி கிணறு மற்றும் குழாய் கிணறு மூலமும் மழைநீரை சேமிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேரணியானது நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் சேகர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஜெய்சங்கர், உதவி நிர்வாக பொறியாளர்கள் பன்னீர்செல்வம், சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் முருகேசன், இளநிலை பொறியாளர் சாந்தி, நில நீர் வல்லுநர் ராதிகா, தாசில்தார் சரவணன், அரசு மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட பேராசிரியர் வள்ளிசித்ரா மற்றும் அரசுத்துறைகளின் அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர். …