மதுரை, ஏப். 29: மதுரை மாவட்ட கால்நடை பாரமரிப்பு துறை சார்பில், உலக கால்நடை தின விழா அவனியாபுரத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகியவற்றின் மதுரை மாவட்டக் கிளைகள் சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் நடராஜ்குமார் தலைமை வகித்தார்.
தென்மண்டல காவல்துறை ஐ.ஜி கண்ணன் சிறப்பு விருந்தினராக விழாவினை துவக்கி வைத்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் சிகிச்சையியல் துறை பேராசிரியர் சிவராமன் கால்நடைகளில் கோடை காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான தடுப்பு மற்றும் சிகிச்சை வழிமுறைகளைப் பற்றி செயல்முறை விளக்கம் அளித்தார். நிகழ்ச்சில் வினாடி வினா நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த முறையில் சேவையாற்றிய கால்நடை மருத்துவர்கள் பாராட்டப்பட்டனர். புதிதாக துறையில் சேர்ந்த இளம் கால்நடை மருத்துவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.