சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் பதவிக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகிற 6ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர்(மொழி பெயர்ப்பு) பதவி தொடர்பான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 6ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரிய கல்வி சான்று மற்றும் அனைத்து மூலச்சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும். மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய ‘அழைப்புக்கடிதத்தினை’தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே அனுப்பப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அவர்களுக்கு உரிய நாளில் வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….