தர்மபுரி, ஏப்.26: காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா மேற்பார்வையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, ஓசூர் மெயின் ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், சிறு விற்பனை நிலையங்கள், பழரச விற்பனை நிலையங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான கடைகள், மாம்பழ குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது, 2 கடைகளில் இருந்த காலாவதியான குளிர்பானங்கள் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும், கடை உரிமையாளர்களுக்கு தலா ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திறந்த நிலையில் அதிக வெயில்பட்ட நிலையில் குளிர்பானங்கள் விற்பனை செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது. தரமான பழங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான ஐஸ் கட்டிகளை பயன்படுத்த வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதுபற்றி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா கூறுகையில், மாம்பழங்களை சீக்கிரம் விற்பதற்காக காய்களை பழுக்க வைக்க செயற்கையான முறையில் கார்பைட் கற்களையோ, ரசாயன வேதிப்பொருளையோ உபயோகப்படுத்த கூடாது. தவறுகள் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.