ஊட்டி : ஊட்டி என்சிஎம்எஸ் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு ெபாருட்களின் கலப்பட தேயிலை தூளை கண்டுபிடிப்பது, கலர் மாற்றம் செய்யப்பட்ட தானியங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது, உணவு தர முத்திரைகள் குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் 8700 லிட்டர் பெறப்பட்டு பயோ டீசலாக மாற்ற பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது: ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் செரிமான கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 85 வணிகர்கள் சேர்ந்து உள்ளனர். 2 அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து, பிப்ரவரி மாதம் வரை 8700 லிட்டர் சமையல் எண்ணெய் பெறப்பட்டு பயோ டீசலாக மாற்றப்பட்டது. ஓட்டல்கள், உணவகங்களில் உணவுகள் மீதமிருந்தால் ஏழை, எளிய மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை 245 முறை வீணான அல்லது மீதமான உணவுகள் பெறப்பட்டு கிடைக்காதவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக உணவு வீணாவதை தடுக்க வணிகர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு உள்ளது. பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் மீதமான உணவுகளை தர விரும்பும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத்துறையை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறினார்….