திருச்சி, செப்.11: திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதில் 5, 10 மற்றும் 21 கி.மீ என்ற 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தன. நேற்று காலை திருச்சி கோர்ட் அருகே உள்ள ஜல்லிக்கட்டு சாலையில் இருந்து புறப்பட்ட 5 கி.மீ ஓட்ட மாரத்தான் போட்டியை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அதே இடத்தில் இருந்து புறப்பட்ட 10 கி.மீ மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி துவக்கி வைத்தார்.
சமயபுரம் கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் இருந்து காலை 5 மணிக்கு துவங்கிய 21 கி.மீ மாரத்தான் ஓட்டத்தை திருச்சி எஸ்பி வருண்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர். மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு ₹.3 லட்சம் வரையிலான பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு டி ஷர்ட் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் முனைவர் செங்குட்டுவன், காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டி செயல் இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.