புதுடெல்லி: ‘நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்கிறார்கள் என்று கூறுவது கட்டுக்கதை,’ என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது, மாநிலங்களவையில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சம்பள திருத்த மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது, கேரள எம்பி ஜான் பிரிட்டாஸ் பேசியபோது, ‘நீதிபதிகள் நியமனம் சாதி அடிப்படையில் நடக்கிறது. நீதிபதி பதவிகளில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர்,’ என குற்றம்சாட்டினார். நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் முறை குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பினார்.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள சட்டக் கல்லூரியில் நடந்த பயிலரங்கில் நேற்று பங்கேற்று பேசியதாவது: சமீபகாலமாக நீதித்துறையினர் மீது அமைப்பு ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதோடு, அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் நீதிபதிகளுக்கு எதிரான பிரசாரமும் நடக்கிறது. ஒரு தரப்புக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காத போது, அவர்கள் அவதூறு பிரசாரங்களை தூண்டி விடுகின்றனர். இது மட்டுமின்றி, ‘நீதிபதிகள் தாங்களாகவே நீதிபதிகளை நியமித்துக் கொள்கிறார்கள்’ என்று பேசுவது நாகரீகமாகி விட்டது. இது பரவலாக பரப்பப்படும் கட்டுக்கதை. உண்மையில், நீதிபதிகள் நியமனத்தில் நீதித்துறை ஒரு அங்கமாக மட்டுமே செயல்படுகிறது. நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய சட்ட அமைச்சகம், மாநில அரசுகள், ஆளுநர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உளவுத்துறை என பல அமைப்புக இடம் பெறுகின்றன. இதைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் கட்டுக்கதைகளை பரப்புவது வேதனை தருகிறது. இவ்வாறு அவர் பேசினார்….