உசிலம்பட்டி, ஜன. 22: உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் உள்ள ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நகர அரிமா சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமை அரிமா சங்க தலைவர் பத்மநாபன், மூத்த உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுகபிரபு, துணை தலைமை ஆசிரியர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் குழுவினர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்துகொண்ட 150க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனைகள் மேற்கொண்டு, சிறிய அளவிலான பாதிப்பு இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். கண்புரை அறுவை சிகிச்சைக்காக 44 பேர் மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் 7 பேருக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், 16 பேருக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் செய்திருந்தார்.