ஈரோடு, டிச.20: ஈரோடு மாநகராட்சியில் 2 வது நாளாக நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 750க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளின் சேவைகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதை தொடா்ந்து, ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் இத்திட்ட முகாம் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது.
இதில், 2 வது நாளாக நேற்று ஈரோடு மாநகராட்சியில் 1ம் மண்டலத்திற்கு உட்பட்ட 6, 7, 15 வார்டுகளுக்கு பி.பெ.அக்ரஹாரம் ரவி மகாலில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமினை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதேபோல், 2ம் மண்டலத்திற்கு உட்பட்ட 5, 8, 9 வார்டுகளுக்கு பெரியசேமூரில் உள்ள சீனாங்காடு மண்டபத்தில் நடந்தது.
இந்த முகாமில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்த 2வது நாள் முகாமில் 750க்கும் மேற்பட்ட மனுக்கள் வர பெற்றதாகவும், அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாமில், மண்டல தலைவர்கள் பழனிசாமி, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, கவுன்சிலர் தமிழ்பிரியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.