ஈரோடு, ஜன.22: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோயில்களின் தேர்களை நிறுத்த பழைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்), கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான தேர்கள் கோயில்களின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு வருகிறது. தற்போது, தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தின் தரைத்தளம் சேதமடைந்துள்ளதால், சக்கரங்கள் பழுதாகும் நிலை இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் தேர்களை நிறுத்த இடம் ஒதுக்கி தரக்கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதன்பேரில், கஸ்தூரி அரங்கநாதர் கோயில் எதிரே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகம் அருகே செயல்படாமல் இருந்த பழைய கட்டிடம் மற்றும் கோயிலுக்கு இடையூறாக இருந்த பொதுக்கழிப்பிடம் போன்றவற்றை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில், இந்த இடத்தில் கோயில்களின் தேர்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் பணி துவங்கப்படும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனா்.