ஈரோடு, ஆக.15: ஈரோட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளிக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணிக்கு தலைமையாசிரியர்கள் வந்தனர். ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் நேற்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிகளில் பணியாற்றினர். இதுகுறித்து கருப்பு பேட்ஜ் அணிந்திருந்த தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது 45 ஆண்டுகளாக இல்லை. அதாவது அடுத்த நிலை பதவி உயர்வு என்பது கிடையாது.
உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர், பணி சமன்படுத்த மாவட்ட கல்வி பதவி வழங்கப்படுகிறது. மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்கான சாத்திய கூறுகளே இல்லாத நிலை உள்ளது. இதேபோல பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. எனவே, பதவி உயர்வுக்கான முரண்பாடுகளை களைந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வழி வகுக்க கோரி நாங்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்கிறோம். இவ்வாறு கூறினர்.