ராஜபாளையம், நவ.20: திமுக இளைஞரணி மாநில மாநாடு விழிப்புணர்வு டூவீலர் பேரணிக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாநகரில் வருகின்ற டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞர் அணியின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாநாடு விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவ.13ம் தேதி திமுக இளைஞரணி மாநில செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார். தொடர்ந்து இளைஞர் அணியின் இருசக்கர வாகன பேரணி தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து நேற்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வந்தடைந்தது.
விருதுநகர் மாவட்ட எல்லையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜபாளையம் நகர் பகுதி எல்லையில் நடந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் தெற்கு வடக்கு நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா மற்றும் நகர் கழக நிர்வாகிகள், மாவட்ட நகர அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டு உற்சாகத்துடன் வரவேற்றனர்.