பெரியபாளையம், மார்ச் 21: இலச்சிவாக்கம் செங்காளம்மன் கோயிலில் 10,008 வளையல்கள் மூலம் அலங்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே இலச்சிவாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்காளம்மன் கோயில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் இக்கோயிலை கிராம மக்கள் புனரமைத்து 24 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய பொலிவுடன் கடந்த மாதம் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
கடந்த 12ம் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில், 37வது நாளான நேற்று மண்டலபிஷேக நிகழ்ச்சியும், பங்குனி மாத செவ்வாய்க்கிழமை என்பதாலும் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், ஜவ்வாது, சொர்ணம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மாலை மூலவருக்கு 10,008 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி, வளையல், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதி கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.