மீனம்பாக்கம்: இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.59.23 லட்சம் மதிப்புடைய 1.3 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த மஸ்தான் கனி (28), கலந்தர் ஷாஜகான் (30), சுல்தான் (27) ஆகியோர் ஒரு குழுவாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக சென்று விட்டு திரும்பினர். அவர்கள் தங்களிடம், ‘சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை’ என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் சென்றனர். அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை மீண்டும் அழைத்து சுங்க அலுவலகத்திற்கு அழைத்து வந்து, உடைமைகளை சோதனையிட்டனர். எதுவும் இல்லை. இதையடுத்து தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களில் தங்க பசை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 1.3 கிலோ தங்கம் பசையை பறிமுதல் செய்தனர். சர்வதேச மதிப்பு ரூ.59.23 லட்சம். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….