புழல், மே 26: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாகீர் உசேன் (45) என்பவர், பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (45). இவருடைய கணவர் முனுசாமி சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவரது இறப்பு சான்றிதழ் கேட்டு உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேனிடம் மனு கொடுத்திருந்தார். இதற்கு ₹5000 கொடுத்தால்தான் இறப்பு சான்றிதழ் வழங்க முடியும், என விஏஓ கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத உமாமகேஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில், நேற்று ரசாயனம் தடவிய ₹5 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலரின் புரோக்கர் மணிகண்டனிடம் உமாமகேஸ்வரி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, ஜாகீர் உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.