இளையான்குடி, பிப்.7: இளையான்குடி அருகே பூலாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரில். இவரது தந்தை அமல்ராஜ். இவர், கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில், சிரில் ரயில்வே துறையில் வேலைக்கு சேருவதற்காக, வருமானச் சான்று கேட்டு, இசேவை மையம் மூலம் இளையான்குடி தாலுகா அலுவலகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், உயிரிழந்த அவரது தந்தை அமல்ராஜின் பெயரில், ஆண்டு வருமானம் ரூ.72,000 என குறிப்பிட்டு வருவாய்த் துறையினர் வருமானச் சான்று கொடுத்துள்ளனர். இதைப் பார்த்து சிரில் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் சிரில் முறையிட்டுள்ளார். இதையடுத்து முறையாக விசாரணை செய்யாமல் இறந்தவர் பெயரில் வருமானச் சான்று வழங்கிய வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிரில் சார்பில் பூலாங்குடி ஊராட்சி தலைவர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்திடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து இளையான்குடி வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘இசேவை மையத்தில் விண்ணப்பித்தபோது அமல்ராஜ் இறந்த தகவலை குறிப்பிட்டு இருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது. விஏஓ முறையாக விசாரணை செய்ய வேண்டும். கோட்டாட்சியர் மூலம் வருமானச் சான்றை ரத்து செய்து விட்டு, வேறு வருமானச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.