திருச்சி, மே 30: திருச்சியில் இரும்பு வியாபாரியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர்நகரை சேர்ந்தவர் ராஜசேகர்(32). தள்ளுவண்டியில் பழைய இரும்பு பொருட்கள் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்குள் குடும்ப தகராறு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தற்போது ராஜசேகர் தனது சகோதரர் மாரிமுத்து வீட்டில் வசித்து வருகிறார். மாரிமுத்து வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுடன் ராஜசேகருக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த 28ம் தேதி அந்த பெண்ணின் வீட்டுக்கு ராஜசேகர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பெண்ணின் உறவினர் ஒருவர், ராஜசேகரை திட்டி தாக்கினார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து வடக்கு தாராநல்லூரை சேர்ந்த வீரமணி (38) என்பவரை கைது செய்தனர்.