Monday, June 17, 2024
Home » இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பாலம் பணி மீண்டும் துவக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பாலம் பணி மீண்டும் துவக்கம்

by kannappan

*வழக்கு தொடர்ந்தவர்கள் வாபஸ் *வாகன ஓட்டிகள் மகிழ்ச்சிராமநாதபுரம் : ராமநாதபுரம்-கீழக்கரை சாலை ரயில்வே மேம்பாலம் பணி 2 ஆண்டுகளுக்கு பின் விரைவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, திசையன்விளை, தூத்துக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் கீழக்கரை ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.இந்த வேளையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருப்பதி, கோவை நகரங்களுக்கு ரயில்கள், வட மாநிலங்களுக்கு செல்லும் தொலைதூர ரயில்கள் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது ரயில்வே கேட்டின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. இச்சிரமம் போக்க கீழக்கரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.நீண்ட கால கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை செல்லும் வகையில் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இப்பணி கடந்த 2018 அக்.18ல் பூமி பூஜையுடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2020 அக்.10ல் பாலம் அரசிடம் ஒப்படைக்க இருந்தது.இந்நிலையில் 2020 மார்ச் 25ம் தேதி கொரோனா தொற்று பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து சுமார் 3 மாதங்கள் கிடப்பில் கிடந்த மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடங்கி மந்தகதியில் நடந்தது.இப்பணிகளில் 45 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய ஸ்டாண்ட் அருகே உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் தான் பாலம் பணி முழுமை பெறும் நிலை ஏற்பட்டது. இதனால் மேம்பால பணிகளுக்கு தடை கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இப்பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.ராமநாதபுரம் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, ராமநாதபுரம் மாவட்ட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் சமரசம் பேசி பணியை துரிதப்படுத்த வருவாய் துறையினருக்கு அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து. ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வா்கீஸ் பாலப்பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டாா். தடை கோரி வழக்கு தொடா்ந்தவா்களை அழைத்து கோட்டாட்சியா் ஷேக் மன்சூா் சமரசம் பேசினாா். இதையடுத்து வழக்கு தொடர்ந்தோர் வழக்கை திரும்பப் பெற சம்மதித்தனர்.தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லா கான் கூறியதாவது: ராமநாதபுரம் கீழக்கரை ரபில்வே மேம்பாலம் கட்டும் இடத்தில் எங்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கையில் அந்த இடத்திற்கு அரசு நிர்ணயித்த தொகை மிகக் குறைவாக இருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இந்நிலையில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கை திரும்ப பெற்றேன். இன்னும் சில மாதங்களில் மேம்பாலம் பணி நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்றார்.நீண்ட இழுபறிக்கு பின் பணிகள் மீண்டும் தொடங்கி மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால். வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

You may also like

Leave a Comment

12 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi