நாகர்கோவில், மார்ச் 26: இரணியல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி மீது, தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று முன் தினம் இரவு, குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள புதுக்குளத்தன்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (55). லாரி டிரைவர். இவர் மீது குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளையைச் சேர்ந்த அருள்பாபி (53) என்பவரை கொலை செய்த சம்பவத்தில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304 (ii) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு கொலைக்குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்த செயலுக்காக பதியப்படும் வழக்காகும். இந்த வழக்கில் கடந்த ஜனவரியில் ராஜனை குளச்சல் போலீசார் கைது செய்தனர். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேல், நாகர்கோவில் சிறையில் இருந்து வருகிறார். நேற்று முன் தினம் விசாரணைக்காக, ராஜனை இரணியல் நீதிமன்றத்துக்கு ஆயுதப்படை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது கழிவறை செல்ல வேண்டும் என கூறிய ராஜன், கழிவறைக்குள் சென்று உடைந்த டைல்ஸ் மூலம் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு இதை தடுக்க முயன்ற ஆயுதப்படை காவலர் சுகு சுந்தருக்கும் கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. கழுத்தில் காயம் அடைந்த ராஜனை காப்பாற்றி, குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து நேற்று முன் தினம் இரவு, ராஜனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை போலீஸ்காரர் சுகுசுந்தர் அளித்த புகாரின் பேரில், ராஜன் மீது தற்கொலைக்கு முயன்றதாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜன், தற்போது போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்….