திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோவிலூரில் தனியார் அடகு கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் ஏலச்சீட்டும் நடத்தி வந்தனர். இங்கு முதலீடு செய்யும் பணத்துக்கு குறைந்த காலத்தில் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி உள்ளனர். இதை நம்பி பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்த பலருக்கு சீட்டு காலம் முடிந்தும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அதேபோல் அடகு வைத்த நகைகளையும் திருப்பி வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் திண்டுக்கல்லில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், பொதுமக்களிடம் முதலீடாக ரூ.5 கோடி வரை பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. மேலும், அடகு வைத்த நகைகள் அனைத்தையும் கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்து, அதிக பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் ரூ.80 லட்சம் மதிப்பிலான நகைகளை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அடகுக்கடை நிர்வாகிகளான கோவிலூரை சேர்ந்த பாலகுரு (54), விஜயகுமார் (56), ஜெயச்சந்திரன் (55) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களை பொருளாதார குற்றப்பிரிவை சேர்ந்த தனிப்படையினர் தேடி வருகின்றனர்….