பாலஸ்தீனம் : கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசுவின் பெத்லஹேம் நகரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். இஸ்ரேல் அருகே மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீனம் நகரமான பெத்லஹேம் இயேசுவின் பிறப்பிடமாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக பெத்லஹேம் நகரத்திற்குள் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. உலகளவில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து கிருஸ்துவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெத்லஹேமுக்கு படையெடுத்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் பெத்லஹேம் நகரம் விழா கோலம் கொண்டிருக்கிறது. பெத்லஹேமில் உள்ள 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் அங்குள்ள ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்று வரும் வனவேடிக்கைகள் மற்றும் ஒளி ஒளி காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்தாண்டு பெத்லஹேம் நகருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகைதர வாய்ப்பிருப்பதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …