கிருஷ்ணகிரி, பிப்.4: தர்மபுரி மாவட்டம், லளிகம் அருகேயுள்ள நார்த்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் காருகொண்டப்பள்ளி கூட்ரோடு அருகேயுள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், தள பொறியாளராக பணியாற்றி வருகிறார். அங்கு டிரைவராக ஓசூர் பேரண்டப்பள்ளியைச் சேர்ந்த ராமமூர்த்தி(20) பணியாற்றி வருகிறார். இவரை கடந்த வியாழக்கிழமை மண்ணை ஒரு இடத்தில் கொட்டி வைக்கும்படி தெரிவித்தனர். ஆனால், அவர் வேறு இடத்தில் மண்ணை கொட்டினார். இது தொடர்பாக வீரமணி கேட்ட போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அன்றிரவு சுமார் 9.45 மணியளவில், ராமமூர்த்தி, தனது நண்பர்களான ஓசூர் தனியார் கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வரும் பன்னப்பள்ளி சிவசங்கர்(26), நரிக்கன்புறம் மஞ்சுநாத்(26), குமுதேப்பள்ளி மனோஜ்(25) ஆகியோருடன் கட்டுமான நிறுவனத்திற்கு வந்து, வீரமணியை மரக்கட்டை மற்றும் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததையடுத்து, 4 பேரும் தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்த வீரமணியை மீட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில், கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கர், மஞ்சுநாத், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராமமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.