கமுதி, ஏப்.15: கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் பெரும்பான்மையாக இந்துக்களும்,முஸ்லிம்களும் இணைந்து வாழ்கின்றனர். இங்கு அனைவரும் விவசாயிகளாக இருந்து வரும் நிலையில், சித்திரை முதல் நாளான நேற்று மாலை பொன் ஏர் விடும் விழா நடத்தினர்.
கிராமத்தில் உள்ள பிள்ளையார்கோவிலில் இருந்து கொம்புகளில் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கபட்ட 4 ஜோடி காளைகள் மற்றும் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கபட்ட டிராக்டர்களும் மற்றும் ஊர் பள்ளிவாசல் முன்பு இருந்து பலூன் கட்டி அலங்கரிக்கபட்ட இரண்டு ஜோடி காளைகள் மற்றும் டிராக்டர்கள் இணைந்து பள்ளிவாசல் முன்பு துவா செய்யப்பட்டு ஊர்வலமாக 6 ஜோடி மாடுகள் மற்றும் 30 டிராக்டர் கொண்டு விவசாய நிலங்களில் பொன் ஏர் விடும் விழா நடத்தினர்.
அனைவரின் வயல்களிலும் நெல் மற்றும் நவதானியங்கள் பூஜைகள் செய்யப்பட்டு தேங்காய் உடைத்து நெல் மணிகள் விதைக்கப் பட்டன. இதுபோல் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி, திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு தெற்கு கிராமத்தில் நெல் விதைப்பு வழிபாடு நடைபெற்றது.