திருச்சி, ஆக.26: பிரதமர் அனைவரையும் இந்தி படிக்கக் கூறுவது தேசப்பற்று. அதையே நான் என் மக்களை தமிழ் படிக்க கூறுவது தேசத் துரோகமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் நேற்று நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 10 ஆயிரம் புத்தகங்களை படித்து இருக்க வேண்டும். 10 ஆயிரம் மைல் பயணம் செய்திருக்க வேண்டும் என்பது சீன பொன்மொழி. அம்பேத்கர் மட்டுமே தன் வாழ்நாளில் 65 ஆயிரம் புத்தகங்களை படித்துள்ளார். இந்திய நாட்டின் நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்த இனம் நாகர்கள் எனப்படும் தமிழ் இனம். அவர்கள்தான் இந்த மண்ணின் மூத்த குடி என அம்பேத்கர் கூறியுள்ளார். இது பாஜவுக்கு தெரியும். அதனால் தான் வெளிநாடுகளில் பிரதமர் மோடி தமிழ் தொன்மையான மொழி.
தமிழ் மொழி இந்திய மொழி என்பதில் பெருமை கொள்கிறோம் என்று பேசுகிறார். ஆனால் அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்கிறார். அவர்கள் இந்தி படிக்க வேண்டும் எனக் கூறினால் தேசப்பற்று. ஆனால் தமிழ் மக்களை தமிழ் படிக்க கூறினால் அது தேசத்துரோகமா. பாஜவுக்கு ஆட்டம் காட்ட சரியான ஆள் இல்லை. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள் அனைவருக்கும் வேலை அளித்து தன்னிறைவு அடைந்து விட்டீர்களா, அப்படி கொடுத்துவிட்டீர்கள் என்றால் ஒன்றரை கோடி இந்திக்காரர்கள் ஏன் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். நான் எதற்கு இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் வெங்காயம் விலை உயர்வு கேட்டால், ராமர் கோயில் கட்டி முடித்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இது நம் மண். நாம் மூத்த குடிகள். எனவே தமிழ் வென்றாக வேண்டும். அதற்கு நாம் ஒன்றாக வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.