சங்கரன்கோவில், செப்.1: பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சங்கரன்கோவில் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமையில் ஆணையாளர் சபாநாயகம் முன்னிலையில் நடந்தது. இதில் துணை சேர்மன், கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டதற்கும், இந்தியாவிலேயே முதன்முதலாக பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை கொண்டு வந்ததற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.