Saturday, May 18, 2024
Home » இந்தியன் ஆயில் நிறுவன பணிகளுக்காக பெருங்காவூர் ஏரியில் அதிகளவில் மண் எடுப்பதை எதிர்த்து வழக்கு: மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

இந்தியன் ஆயில் நிறுவன பணிகளுக்காக பெருங்காவூர் ஏரியில் அதிகளவில் மண் எடுப்பதை எதிர்த்து வழக்கு: மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

by Karthik Yash

திருவள்ளூர், மே 12: இந்தியன் ஆயில் நிறுவன கட்டுமான பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஏரியில் மண் எடுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வத்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், பொன்னேரி தாலுகாவில் பெருங்காவூர் கிராமத்தில் 375 ஏக்கரில் பரவியுள்ள ஏரி, அதை சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கும் நீர் ஆதாரமாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு பாசன வசதிக்காகவும் பயன்பட்டு வருகிறது.

இந்த ஏரி வழியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் குழாய்களை பதிப்பதற்கு சென்றம்பாக்கத்தை சேர்ந்த ஜி.ஆர்.வி.மினரல்ஸ் என்ற நிறுவனத்திற்கு 3 மீட்டர் மட்டுமே மண் எடுக்க குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 15 மீட்டர் ஆழம் வரை ஏரி மண் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் ஏரி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுப்பதற்காக தாலுகா வாரியான குழுக்களை அமைக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டும், அது போன்ற குழுக்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை.

எனவே, அனுமதிக்கப்பட்டதை விட சட்டவிரோதமாக பெருங்காவூர் ஏரியில் மண் எடுப்பதை தடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

18 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi