கடையம், மார்ச் 27: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் (69). அப்பகுதியில் தனியார் குடிநீர் ஆலை நடத்தி வந்தார். ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பணிபுரியும் வரிவசூலர் இசக்கியம்மாள் என்பவர் கடந்த 14ம்தேதி, இந்த ஆலைக்கு சென்றதோடு சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை கட்டவில்லை என சங்கரனிடம் கூறி கேட்டுள்ளார்.
அப்போது இசக்கியம்மாளை சங்கரன் அவதூறாக பேசியதோடு அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். பின்னர் இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரான பூதப்பாண்டி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சங்கரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.