Saturday, June 1, 2024
Home » ஆலங்காயம் அருகே ரெட்டியூர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈமக்காடு கண்டெடுப்பு-இரும்பு உருக்கும் ஆலைகள் தடயமும் உள்ளது

ஆலங்காயம் அருகே ரெட்டியூர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈமக்காடு கண்டெடுப்பு-இரும்பு உருக்கும் ஆலைகள் தடயமும் உள்ளது

by kannappan

திருப்பத்தூர் : ஆலங்காயம் அருகே ரெட்டியூர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால ஈமக்காடு  கண்டெடுக்கப்பட் டுள்ளது. மேலும் இரும்பு உருக்கும் ஆலைகள் தடயங்களும் உள்ளது.திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு மற்றும்  மாணவர்கள் தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் நேற்று கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, மிகப்பெரிய ஈமக்காடு ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே கிழக்கில் 17 கி.மீ. தொலைவில் ரெட்டியூர் கிராமம் உள்ளது. இங்கு சமூக ஆர்வலர் அளித்த தகவலின்பேரில், எனது குழுவினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். ஏலகிரி மலையின் பின்புற சரிவில் நீலிக்கொல்லி என்ற பகுதியில் 15க்கும் மேற்பட்ட 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்குவைகள் காணப்படுகின்றன. அவற்றுள் 3 கற்குவைகள் கல்வட்டத்திற்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்குவைகளும் 15 மீட்டர் சுற்றளவு கொண்டு பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன.ஒரு கற்குவைக்கு  நடுவே கற்திட்டை அமைப்பும் காணப்படுகிறது. இங்குள்ள கற்குவைகளுக்கு அருகே 3 இரும்பு உருக்கும் ஆலை இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இரும்பு உலைக்குள் காற்றினை செலுத்த பயன்படுத்தப்படும் ஊது குழாய்கள் நிறைய சிதறிக்கிடக்கின்றன. செவ்வக வடிவில் உள்ள இரும்பு உருக்கும் உலை இருந்ததற்கான அடித்தளம் இன்னும் அதேநிலையில் இங்கு காணப்படுகிறது. இவை பெருங்கற்கால மக்கள் வாழ்ந்தனர்  என்பதற்கான உறுதியான தடயங்களாகும். கற்குவைகள் என்பவை பெருங்கற்கால மக்களது ஈமச்சின்னங்கள் ஆகும்.அன்றைய காலத்து மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்துவிட்டு அந்த இடத்தை அடையாளம் காண பல குறியீடுகளை அமைத்திருந்தனர். அவை கல்வட்டம், கற்திட்டை, கற்பதுக்கை, நெடுங்கல் போன்றவையாகும். இவ்வரிசையில் கற்குவை என்ற அமைப்பும் அடங்கும். அதாவது இறந்தவரை அடக்கம் செய்து அதற்கு மேலே பல கற்களை குவியலாக குவித்து வைத்து அந்த இடத்தை அக்கால மக்கள் அடையாளப்படுத்தி இருந்தனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 15க்கும்  மேற்பட்டவை கிடைத்திருப்பது கவனத்திற்குரியதாகும். இவ்விடம் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான வலுவான தடயங்களாக உள்ளன. ஏற்கனவே குண்டுரெட்டியூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் இதுபோன்ற இரும்பு உருக்கும் ஆலை இருந்ததையும், அங்கே கற்கால மக்கள் வாழ்ந்ததையும் அடையாளப்படுத்தி இருந்தோம். அதைத்தொடர்ந்து, இப்பகுதியில் கிடைத்திருப்பது கவனத்திற்குரியதாகும். இப்பகுதியை தொல்லியல் துறையினர் முறையான ஆய்வினை மேற்கொள்ளும்போது இங்கு மேலும் பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கிடைக்க கூடும்.இவ்வாறு, அவர் கூறினார். …

You may also like

Leave a Comment

15 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi