தர்மபுரி, மே 25: தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தொகுப்பூதியத்தில் ஆற்றுப்படுத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆற்றுப்படுத்துனர் (கவுன்சிலிங் செய்பவர்) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பட்டதாரி, சமூகப்பணி, சமூகவியல், உளவியல், ஆற்றுப்படுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆற்றுப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்பியலில் பிஜி டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
பெண்கள் குழந்தைகள் மேம்படுத்துறையில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனத்தில் குறைந்தப்பட்சம் ஒருவருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.42 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. இந்த பதவிக்கான விண்ணப்பத்தை WWW.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக பாதுகாப்புத்துறை, கலெக்டர் அலுவலக வளாகம், தர்மபுரி என்ற முகவரிக்கு வரும் 5ம்தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.