ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 26: ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மிளகாய்க்கு உலர் களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகமான மிளகாய் விளையக் கூடிய பகுதிகளில் ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மக்களின் வாழ்வாதாரமாக மிளகாய் விவசாயம் உள்ளது.
இந்நிலையில் மிளகாய் பழங்களை பறித்து உலர்த்துவதற்கு விவசாயிகளுக்கு சரியான உலர் களங்கள் இல்லாத நிலையில் விவசாயி தங்கள் தங்கள் தோட்டங்களில் விளைவித்து பறித்த மிளகாய் பழங்களை காடு, மேடு, வயல்வெளிகளில் உலரப் போடுவதால் மிளகாய் காய்ந்த பின்னர் அந்த மிளகாய் வத்தல் கலர் மங்கிய நிலையிலும், அதிகமான மிளகாய் வெள்ளை நிறமாக பழுப்படைந்து விடுகிறது. இதனால் மிளகாய் வத்தலுக்கு உரிய விலை கிடைக்காமல் போய் விடுவதாகவும், கஷ்டப்பட்டு விளைவித்து பயனில்லாமல் போய் விடுவதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதற்கு ஒரு தீர்வாக உலர் களம் அமைத்து கொடுத்தால் மிளகாய் வத்தல் கலர் மங்காமல் நல்ல சிகப்பு நிறமாக இருக்கும். அவ்வாறு சிவப்பு மங்காமல் இருக்கும் மிளகாய் வத்தலுக்கு அதிகபட்சம் விலை கிடைக்க வாய்ப்பாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க விவசாயிகளின் நலன் கருதி அரசு சார்பாக கிராமங்கள் தோறும் உலர்களங்களை அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என விவசாய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.