Sunday, June 16, 2024
Home » ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலுக்கு விரதமிருக்கும் பக்தர்கள் மட்டும் செல்லும் படகில் போட்டோ ஷூட்: மலையாள டிவி நடிகை கைது

ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலுக்கு விரதமிருக்கும் பக்தர்கள் மட்டும் செல்லும் படகில் போட்டோ ஷூட்: மலையாள டிவி நடிகை கைது

by kannappan

திருவனந்தபுரம்: விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறிச்செல்லும்  பிரபல ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் படகில் ஷூ அணிந்து ஏறி போட்டோ ஷூட் நடத்திய மலையாள டிவி நடிகை கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் உள்ளது.  இந்தக் கோயிலில் இருந்து தான் மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி கொண்டு செல்லப்படுகிறது. இக்கோயிலில் வருடந்தோறும்  ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘வள்ள சத்யா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது பாரம்பரிய படகுகளில் பக்தர்கள் பம்பை ஆறு வழியாக கோயிலுக்கு செல்வார்கள். கடும் விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இந்தப் படகில் செல்ல முடியும். இந்த படகு ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படும்.ஓணம் பண்டிகையை முன்னிட்டு படகுப் போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.  கோயில் நிகழ்ச்சிகள் இல்லாத சமயங்களில் இந்தப் படகுகள் ஆங்காங்கே ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மலையாள டிவி நடிகையான நிமிஷா என்பவர் படகில் ஏறி போட்டோ ஷூட் எடுத்தார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேன்ட்ஸ், டீ சர்ட் அணிந்தபடி இவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் அந்த போட்டோக்களை சமூக வலை தளங்களில்  அவர் வெளியிட்டார்.பாரம்பரியமிக்க ஆரன்முளா கோயில் படகில் டிவி நடிகை நிமிஷா ஷூ அணிந்து ஏறி போட்டோ எடுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி அவர் மன்னிப்பு கோரினார். இதற்கிடையே மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உண்ணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று விசாரணைக்காக நிமிஷா மற்றும் உண்ணி ஆகியோர் ஆரன்முளா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்….

You may also like

Leave a Comment

20 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi