கும்மிடிப்பூண்டி,மார்ச் 4: பொன்னேரி வட்டம் ஆரணி பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 4 சுயேச்சை கவுன்சிலர்கள், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். பொன்னேரி வட்டம், ஆரணி பேரூராட்சியில் 15 வார்டில் 10 சுயேச்சை வேட்பாளர்கள், 3 திமுக வேட்பாளர்கள், 1 அதிமுக வேட்பாளர், 1 காங்கிரஸ் வேட்பாளர் என, வெற்றி பெற்றனர். இந்நிலையில், ஆரணி பேரூராட்சியின் 1வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் அருணா, 2வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் கௌசல்யா, 6வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சுபாஷினி, 7வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ராஜேஸ்வரி ஆகிய 4 ச கவுன்சிலர்களும், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்து, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த 4 பேருக்கும் திமுக உறுப்பினர் படிவத்தை வழங்கி, அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்திய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆரணி பேரூராட்சியில் திமுக சார்பில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்ற அறிவுறுத்தினார். இந்நிகழ்சியில், சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் நா.செல்வசேகரன், ஆரணி பேரூராட்சி செயலாளர் ஜி.பி.வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் நிலவழகன், சந்திரசேகர், தமிழழகன், விமல்ராஜ், சாய் சத்யம், திமுக ஆரணி பேரூராட்சி கவுன்சிலர்கள் டி.கண்ணதாசன், பொன்னரசி, ரகுமான்கான், மாவட்ட கவுன்சிலர் சாரதாம்மாள் முத்துசாமி, வழக்கறிஞர் தேவேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆரணி பேரூராட்சியில் 10 பேர் சுயேச்சை கவுன்சிலர்களாக இருந்த நிலையில், ஆரணி பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவராக சுயேச்சை கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், 3 திமுக கவுன்சிலர்களோடு, தற்போது திமுகவில் 4 சுயேச்சைகள் சேர்ந்த நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலரோடு சேர்த்து திமுக சார்பில் தற்போது 8 கவுன்சிலர்கள் உள்ளனர். எனவே, ஆரணி பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை திமுக கவுன்சிலர்கள் பெறும் சூழல் தற்போது உருவாகி உள்ளது. …
ஆரணி பேரூராட்சியில் எம்எல்ஏ முன்னிலையில் சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேர் திமுகவில் இணைந்தனர்
previous post