ஆரணி, ஏப். 7: ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் பாஞ்சாலி அம்மன் சமேத தர்மராஜா கோயிலில் உள்ளது. இக்கோயிலில், மகாபாரத அக்னி வசந்த விழா மார்ச் 24 முதல் மே 5 ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 23ம் தேதி அன்று கோயில் வளாகத்தில் கொடியேற்றுதல், அதன்பின்னர், பந்தக்கால் நட்டு விழா தொடங்கியது. மேலும், மகாபாரத சொற்பொழிவாளர்கள் சவுந்தரராஜன், பால்ராஜன் தலைமையில் நாள்தோறும் கர்ணன் பிறப்பு, அலகுநிறுத்துதல், கிருஷ்ண பகவான் ஜனனம் சிறப்பு யாகவேள்வி பூஜை, தர்மர் பிறப்பு, அர்ஜூனன் பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி,கோயில் வளாகத்தில் பாஞ்சாலியம்மன் பிறப்பு சிறப்பு யாகவேள்வி பூஜை நேற்று நடந்தது. அப்போது, சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, யாக பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.