திருச்சி, பிப்.9: திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் இரண்டாம் நாளாக, இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புதுறை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடந்தது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு அடுத்த கட்ட தேர்விற்கு, திருச்சி மாநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் 800 பெண் போட்டியாளர்களுக்கு கடந்த பிப்.6ம் தேதி திருச்சி மாநகர கே.கே.நகா் ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ்கள் சாிபார்த்தல், உடல் அளவீட்டு சோதனை, சகிப்புதன்மை தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகியன முதற்கட்ட தேர்வாக நடந்தது. இந்த தேர்வுகள் பிப்.6ம் தேதி முதல் பிப்.10ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த பிப்.6ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்வுகளில் தகுதிபெற்ற 195 பெண் போட்டியாளர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டு, அதில் 191 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கலந்து கொண்டவா்களுக்கு உடற்தகுதி தேர்வுக்கான போட்டிகள் 100 மீட்டா் அல்லது 200 மீட்டா் ஒட்டம், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல் என 3 பிரிவுகளாக நடந்தன. நேற்று நடந்த உடற்தகுதி தேர்வை முன்னின்று நடத்தும் சூப்பர் செக் ஆபிசரும், மாநகர போலீஸ் கமிஷனருமான காமினி நோில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.